Wednesday, November 19, 2008

வைகை பெருகி ..

19

வைகை பெருகி வர
வார்ந்த மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே(கண்ணே)நீ
ஒட்டி வந்த கட்டி முத்தோ

பெருகி வந்த தண்ணியிலே நீ
பின்னணைந்த சந்தனமோ

சந்தணமோ என் பொருளோ நீ
சாமி தந்த தவப்பயனோ

கொட்டி வைத்த முத்தோ நீ
குவிந்த நவ ரத்தினமோ

கட்டிக் கரும்போ நீ
காணிக்கை ஆணி முத்தோ

முத்தில் ஒரு முத்தோ நீ
முதிர விளைந்த முத்தோ

தேற விளைந்த முத்தோ நீ
தில்லைக் குகந்த முத்தோ

ஆயிரம் முத்திலே நீ
ஆராய்ந்தெடுத்த முத்தோ

தொண்ணூறு முத்திலே நீ
துணிந்தெடுத்த ஆணி முத்தோ!

ஆணிப்பெரு முத்தோ நீ
அய்யாக்கள் ஆண்ட முத்தோ

பாண்டி பெருமுத்தோ நீ
பாட்டன்மார் ஆண்ட முத்தோ

முத்தானோ முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ!

முத்தோ பவழமோ நீ
முன் கைக்கு பொன் காப்போ!

கோர்த்த நல் முத்தோ நீ
குறத்தி கையில் தாழ் வடமோ!

சாலை வழியுறங்க..

18

சாலை வழியுறங்க
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் தூங்க
நடுக்கழனி நெல் தூங்க
பாலில் பழந்தூங்க
பாதி நிலா தான்தூங்க

உன்னுறக்கம் நீ கொள்ள
உத்தமியா(ள்) தாலாட்ட
பொற்கொடியா(ள்)தாலாட்ட
புத்திரனே நித்திரை செய்
மங்கையர்கள் தாலாட்ட
மகராசா நித்திரை செய்!
கண்ணே என் கண்மணியே
கற்பகமே நித்திரை செய்
நித்திரையும் போவாயாம்
சித்திரப் பூந்தொட்டிலிலே!(ராராரோ..)

நாழிச்சிறு சலங்கை...

17

நாழிச்சிறு சலங்கை
நல்ல பவுன் பொற்சலங்கை
உழக்குச்சிறு சலங்கை
ஒசத்தியுள்ள பொற்சலங்கை
ஆருக்கு இடுவமுன்னு
தேடித்திரிகையிலே
எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தவனோ!
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானாக வந்தவனோ!

மாசில்லா முத்தோ
மணி வயிரத்தோளானோ!
கல்விக்களஞ்சியமோ
கற்றோர்க்கு தாயகமோ!

செல்வ திருவிளக்கோ
செம்பொன் சுடரொளியோ!
தூண்டா மணிவிளக்கோ
சோதி சுடரொளியோ!

கண்ணில் உறுமணியோ
கலிதீர்த்த பெட்டகமோ!
பொன்னில் உறுமணியோ
பூவிலுறும் வாசனையோ!
கொடிக்கால் மருக்கொழுந்தோ
கோதை கையில் பூச்சரமோ!

சீரங்கம் ஆடி..

16

சீரங்கம் ஆடி திருப்பார் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரை கடலாடி
சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்திபெற்று வந்த கண்ணோ
திங்கள்தனைப் பணிந்து திருக்கேசுரம் ஆடி
தைப்பூசம் ஆடி
தவம் பெற்று வந்த கண்ணோ!
வாடிய நாளெல்லாம் வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்த கண்ணோ!

Tuesday, November 4, 2008

யாரடிச்சார்..

15

ராராரோ ராரிரரோ
ராரிரேரோ ராராரோ

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிஞ்சார சொல்லியழு

மாமனடிச்சானோ
மல்லிகப்பூ செண்டாலே
அத்தையடிச்சாளோ
அமுதூட்டும் கையாலே (ரா..)

அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச்சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்

வெண்ணையில விலங்குசெய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம் (ரா..)

கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட வெண்ணையபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே! (ராராரோ..)

Monday, August 25, 2008

பரட்டை புளிய..

14

பரட்டை புளிய மரம்
பந்தடிக்கும் நந்தவனம்
நந்தவனம் கண் திறந்து
நாலுவகை பூ எடுத்து
பூவெடுத்து பூசை செய்யும்
புண்ணியவார்(பேத்தியோ)பேரனோ!
மலரெடுத்து பூசை செய்யும்
மகராசா(பேத்தியோ)பேரனோ!

வாழை இலை பரப்பி
வந்தாரை கையமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும்
மகராசா(பேத்தியோ)பேரனோ
தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமர்த்தி
தேடி விருந்துவைக்கும்
திசைக்கருணர்(பேத்தியோ)பேரனோ

Thursday, August 14, 2008

இரும்பால ஊரணி...

13

இரும்பால ஊரணியாம்
இருபுரமும் தாமரையாம்
தாமரையில் நூலெடுத்து
தனிப்பசுவில் நெய்யுருக்கி
வாழலையும் மா விளக்கும்
வச்செடுத்த குஞ்சலரோ
தேங்காயும் மாவிளக்கும்
சேர்த்தெடுத்த குஞ்சலரோ
குஞ்சலரோ அஞ்சலரோ
ஆடும் சிதம்பரமோ
தில்லைச்சிதம்பரமோ
திருச்செந்தூர் வேலவரோ
ராராரோ ராரிரரோ..
ராரிரரோ ராராரோ..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12

கண்ணான கண்ணனுக்கு
கண்ணுறக்கம் இல்லைன்னு
தூங்காத கண்ணுக்கு
துரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கண்ணுக்கே மையெழுதி
கண்கவர பொட்டுமிட்டு
வண்டுகள் கவி பாட
மரங்கள் நடமாட
செண்டுகள் ஆட
தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி
அசையுமாம்
பொன்னூஞ்ச(ல்)
ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11

ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..
யாரடிச்சு நீயழுதே
அடிச்சாரை சொல்லியழு
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனா அழுகிறான்
ஆத்தாள் மடி தேடி
தானா அழுகிறான்
தம்பி துணை வேணுமின்னு

Wednesday, August 13, 2008

கடைக்கு கடை ...

9

கடைக்கு கடை பாத்து
கல்லெழச்ச சங்கெடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூருக்கோர் பச்ச வச்சு
வாய்க்கு வைரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்.

(ஒருவருக்கும் மேல் என்றால்
அம்மான்மார் என்று பாடவேண்டும்.)
(அம்மான் என்பது தாய்மாமனை குறிக்கும் சொல்.)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8

காசியில பட்டெடுத்து
கப்பலுல தொட்டி கட்டி
தொட்டி வருஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
தொட்டிக்கும் கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்
கட்டிலுக்கும் கீழே
காத்திருப்பாள் மீனாட்சி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7

கரும்பு கல கலங்க
கல்லாறு தண்ணி வர
கல்லாத்து தண்ணியில
நின்னாடும் பம்பரமோ
பம்பரமோ எம்பொருளோ
பரமசிவர் தந்த கண்ணோ
எம்பொருளோ பம்பரமோ
ஈஸ்வரியாள் தந்த கண்ணோ

Saturday, March 29, 2008

ராரிக்கோ ராரி..

6

ராரிக்கோ ராரிமெத்தை
ராமருக்கோர் பஞ்சு மெத்தை
பஞ்சுமெத்தை மேலிருந்து ராமர்
பஞ்சாங்கம் பார்க்கையிலே
வயசு நூறுன்னு
வாசிச்சார் பஞ்சாங்கம்
எழுத்து நூறுன்னு
எழுதினார் பஞ்சாங்கம்

--------------
5

முத்தான முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ
கோர்த்தநல் முத்தோ நீ
குறத்திகையில் தாழ்வடமோ
ஆராய்ந்தெடுத்த முத்தோ நீ
அடிக்கடலின் ஆணி முத்தோ

-------------------
4

ராராரோ ராரி ராரோ
என் கண்ணே ராரிரேரோ
ராராரோ
காஞ்சிபுரத்தெண்ணை
கண்ணைக் கரிக்கு முன்னு
சேலத்து எண்ணைக்கு அம்மான்
சீட்டெழுதி விட்டாரோ
காலையில ரயிலேறி
கல்கத்தா போயிறங்கி
கடைக்கி கடை பா..த்து
கல்லெளச்ச சங்கெடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூருக்கோ..ர் பச்சை வச்சு
வாய்..ய்க்கு வயிரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்

------------
3

கண்ணான தம்பிக்கு
காதுகுத்தப் போறொமுன்னு
முன்னூறு வெத்திலையும் உனக்கு
மூத்த அம்மான் சீரு வரும்
நானூறு வெத்திலையும் உனக்கு
நடு அம்மான் சீரு வரும்
கல்க்கண்டும் சக்கரையும் உனக்கு
கடை அம்மான் சீரு வரும்
அள்ளிக் கொடுப்பார்
அருமையம்மான் காப்பரிசி
பிடித்துக் கொடுப்பார்
பெரியம்மான் காப்பரிசி

--------------------
2

பூவாய் உதித்தவனோ
புண்ணியத்தால் வந்தவனோ
அரும்பாய் உதித்தவனோ
அருந்தவத்தால் வந்தவனோ
காணிக்கை கொடுத்து
கடைத்தெருவே போகையிலே
மாணிக்கம் என்று சொல்லி
மடிப்பிச்சை தந்தாரோ

-----------------
1

ஏழுகடல் நீந்தி
எடுத்து வந்த தாமரைப் பூ
பத்து கடல் நீந்தி
பறிச்சு வந்த
தாமரைப் பூ
அனைச்சு மனமகிழ
அள்ளி வந்த தாமரைப் பூ
கொஞ்சி மனமகிழ
கொண்டுவந்த தாமரைப் பூ