Thursday, April 9, 2009

சதுரகிரி மலையேறி...

22.

ராராரோ ராரிரேரோ...
ராரிரேரோ....

சதுரகிரி மலையேறி
சாதிலிங்க கட்டை வெட்டி

ஈழத்து கப்பலிலே
ஏற்றிவரும் தேக்குமரம்

ஏழு தச்சன் ஆசாரி
இழைபிழைக்கும் கம்மாளர்

சேர்த்து பணி படுத்தி
சித்திரத்தால் ஒப்பமிட்டு

முன்பக்க தொட்டிலுக்கு
முத்துச்சரம் வைத்திழைத்து

பின்பக்க தொட்டிலுக்கு
பச்சைக்கல் வைத்திழைத்து

வலதுபுற தொட்டிலுக்கு
வைரக்கல் வைத்திழைத்து

இடதுபுற தொட்டிலுக்கு
இரத்தினக்கல் வைத்திழைத்து

பஞ்சாட்சரமெழுதி ஒங்க
பாட்டனார் பேரெழுதி

சிரிக்கும் கிளியெழுதி ஒங்க
சின்னய்யா பேரெழுதி

அஞ்சு கிளி கொஞ்ச
ஆண்டம்மான் பேரெழுதி

கொஞ்சு கிளி அஞ்செழுதி
குட்டியம்மான் பேரெழுதி

தாரா எழுதி
தாய் மாமன் பேரெழுதி

அன்னம் எழுதி
அதன் மேல் புறாவெழுதி

கொண்டு வந்து கண்டானே ஆசாரி
கொம்பனையா வாசலிலே..

ராராரோ...