Monday, August 25, 2008

பரட்டை புளிய..

14

பரட்டை புளிய மரம்
பந்தடிக்கும் நந்தவனம்
நந்தவனம் கண் திறந்து
நாலுவகை பூ எடுத்து
பூவெடுத்து பூசை செய்யும்
புண்ணியவார்(பேத்தியோ)பேரனோ!
மலரெடுத்து பூசை செய்யும்
மகராசா(பேத்தியோ)பேரனோ!

வாழை இலை பரப்பி
வந்தாரை கையமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும்
மகராசா(பேத்தியோ)பேரனோ
தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமர்த்தி
தேடி விருந்துவைக்கும்
திசைக்கருணர்(பேத்தியோ)பேரனோ

Thursday, August 14, 2008

இரும்பால ஊரணி...

13

இரும்பால ஊரணியாம்
இருபுரமும் தாமரையாம்
தாமரையில் நூலெடுத்து
தனிப்பசுவில் நெய்யுருக்கி
வாழலையும் மா விளக்கும்
வச்செடுத்த குஞ்சலரோ
தேங்காயும் மாவிளக்கும்
சேர்த்தெடுத்த குஞ்சலரோ
குஞ்சலரோ அஞ்சலரோ
ஆடும் சிதம்பரமோ
தில்லைச்சிதம்பரமோ
திருச்செந்தூர் வேலவரோ
ராராரோ ராரிரரோ..
ராரிரரோ ராராரோ..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12

கண்ணான கண்ணனுக்கு
கண்ணுறக்கம் இல்லைன்னு
தூங்காத கண்ணுக்கு
துரும்பு கொண்டு மையெழுதி
உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கண்ணுக்கே மையெழுதி
கண்கவர பொட்டுமிட்டு
வண்டுகள் கவி பாட
மரங்கள் நடமாட
செண்டுகள் ஆட
தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி
அசையுமாம்
பொன்னூஞ்ச(ல்)
ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11

ஆராரோ ஆரிரரோ..
ஆரிரரோ ஆராரோ..
யாரடிச்சு நீயழுதே
அடிச்சாரை சொல்லியழு
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
அவனா அழுகிறான்
ஆத்தாள் மடி தேடி
தானா அழுகிறான்
தம்பி துணை வேணுமின்னு

Wednesday, August 13, 2008

கடைக்கு கடை ...

9

கடைக்கு கடை பாத்து
கல்லெழச்ச சங்கெடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூருக்கோர் பச்ச வச்சு
வாய்க்கு வைரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்.

(ஒருவருக்கும் மேல் என்றால்
அம்மான்மார் என்று பாடவேண்டும்.)
(அம்மான் என்பது தாய்மாமனை குறிக்கும் சொல்.)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8

காசியில பட்டெடுத்து
கப்பலுல தொட்டி கட்டி
தொட்டி வருஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
தொட்டிக்கும் கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்
கட்டிலுக்கும் கீழே
காத்திருப்பாள் மீனாட்சி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7

கரும்பு கல கலங்க
கல்லாறு தண்ணி வர
கல்லாத்து தண்ணியில
நின்னாடும் பம்பரமோ
பம்பரமோ எம்பொருளோ
பரமசிவர் தந்த கண்ணோ
எம்பொருளோ பம்பரமோ
ஈஸ்வரியாள் தந்த கண்ணோ