Thursday, October 1, 2009

அம்மானார் எல்லையிலே ..

29

அம்மானார் எல்லையிலே
என்னவச்சா தோப்பாகும்

வச்ச பயிர் வளரும்
வாழைவச்சாத் தோப்பாகும்

சேத்த பயிர் வளரும்
தென்னைவச்சாத் தோப்பாகும்

தொட்ட எடந்தொலங்கும்
தோ..ட்டம் பயிராகும்

தென்னையும் வாழையும்
சேத்துவச்சாத் தோப்பாகும்

வாழையும் தென்னையும்
வாங்கிவச்சாத் தோப்பாகும்

இஞ்சி பயிராகும்
எலுமிச்சை தோப்பாகும்

மஞ்சப் பயிராகும்
மாதுளையும் தோப்பாகும்

ஏலக்கா.. காய்க்கும்
இரு..நூறு பிஞ்சுவிடும்

சாதிக்கா காய்க்கும்
தாய்மாமன் எல்லையில

வாழை இலை போட்டு
வந்தாரை கையமத்தி

வருந்தி விருந்துவைக்கும்
மகராசா பேர..னோ

தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமத்தி

தே..டி விருந்து வைக்கும்
திசை கருணர் பேரனோ.

ராராரோ ராரிரரோ
என் கண்ணே
ராரிரரோ ராராரோ.

Thursday, September 24, 2009

கற்பகத்தைத் தேடி...

28

ராராரோ ராரிரரோ
என்கண்ணே
ராரிரரோ ராராரோ

கற்பகத்தைத் தேடி காண
வரும் போது என் கண்ணே
உன்னரிய அம்மானும்
என்ன கொண்டு வந்தாக..

கொத்துவிடா நெத்தும்
கோதுபடா மாங்கனியும்
கோடைப் பலாச்சுளையும்
குலை சேர்ந்த மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும்
பக்குவமா மாங்கனியும்
அக்கரையிச் சக்கரையும்
அதிமதுர தென்னவட்டும்..

காச்சிய பாலும்
கல்கண்டும் செந்தேனும்
ஏலங்கிராம்பும் இளம்
கொடிக்கா வெத்திலையும்
சாதிக் களிப்பாக்கும்
சங்குவெள்ளைச்
சுண்ணாம்பும்..

அத்தனையும் கொண்டு
அறிய வந்தார் அம்மானும்
பழ வருக்கம் கொண்டு
பாக்க வந்தார் அம்மானும்
ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

Thursday, July 9, 2009

மதுரை இரு காதம்

27

மதுர இரு காதம்
வாழ் மதுர முக்காதம்
அம்பத்தாறு தேசம்
ஆள வந்த சீமானோ

பாட்டனாராண்ட
பதினெட்டு ராச்சியமும்
நாட்டமுடன் ஆள வந்த
ராசாவோ எங்களய்யா(ராராரோ)

வெள்ளி வளை பூட்டி
விசாலமா தொட்டி கட்டி
தங்க வளை பூட்டி
சதுரலங்கா(ய்)த் தொட்டி கட்டி

பச்சை இலுப்ப வெட்டி
பால் வடிய தொட்டி கட்டி
தொட்டியில அட்டணக்கா(ல்)
தூங்குறது யாரு மகன்

இன்னார் மகனோ
இனியார் மருமகனோ
தனதாய் விளையாட
தவம் பெற்று வந்தவனோ

ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

Thursday, July 2, 2009

பிள்ளைக் கலி தீர்த்த..

26

ராராரோ ராரிரரோ
என்(கண்ணே)னய்யா
ராரிரரோ ராராரோ
பிள்ளைக் கலி தீர்த்த
பெருமானும்(பெருமகளும்)நீதானோ
மாம்பழத்தைக் கீறி
வயலுக்குரம் போட்டு
வெள்ளித்தேர் பூட்டி
மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும்
அதிட்டமுள்ளோர்(புத்திரியோ)புத்திரனோ
வாரிப் படியளக்கும்
மகிமையுள்ளோர் புத்திரனோ
சேற்றிலொரு செங்கழுநீர்
திங்களொரு பூப்பூக்கும்
நூற்றிலொரு பூவெடுத்து
முடிப்பார்(மகளோ)மகனோ நீ
ராராரோ ராரிரரோ
என்னய்யா(என்னாத்தா)
ராரிரரோ ராராரோ

Tuesday, June 2, 2009

அதியமலை பொதியமலை

25

அதியமலை பொதியமலை
அகத்தீசர் ஆளும் மலை
கங்கை திரண்ட மலை
கிருபையுள்ள பொதியமலை

தேவர்களும் முனிவர்களும்
தேவ பூசை செய்யும் மலை
நாகமலை தோகைமலை
சுவாமி மலை சுற்றி வந்து

ஏழு மலை கழித்து
பழனி மலை போய்ச் சேர்ந்து
பார்வதியாள் பாலகனின்
பாதம் பணிந்து வந்தேன்

மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் செம்புருக
கண்டார் மனமுருக

பச்சை நிற வள்ளியம்மை
பவழ நிறத் தெய்வானை
சோதி நிற வேலவரும்
சொல்லி வரம் தந்தாரோ

கட்டிக்கரும்பே...

24

கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்

யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ

கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி

தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக

அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..

Thursday, May 7, 2009

சொக்கர் மீனாள் தாலாட்டு!

23

மதுரைக்கும் நேர்கிழக்கே
மழைபெய்யாக் கானலிலே
வெள்ளிக்கலப்பை கொண்டு சொக்கர்
விடிகாலம் ஏர்பூட்டி
தங்கக்கலப்பை கொண்டு சொக்கர்
தரிசுழுகப் போனாராம்

வாரி விதைபாவி
வைகை நதி தீர்த்தம் வந்து
அள்ளி விதைபாவி
அழகர்மலை தீர்த்தம் வந்து
பிடித்து விதைபாவி
பெருங்கடலில் தீர்த்தம் வந்து
எங்கும் விதைபாவி
ஏழுகடல் தீர்த்தம் வந்து
முத்து விதைபாவி
மிளகுச்சம்பா நாத்து நட்டு

பவளக்குடை பிடித்து சொக்கர்
பயிர்பாக்க போகையிலே
வங்காளஞ் சிட்டு
வயலிறங்கி மேய்ந்ததுன்னு
சிங்கார வில்லெடுத்து
தெறித்தாராம் அம்பினாலே

ஊசி போல் நெல் விளையும்
ஒரு புறமாய்ப்போறேரும்
பாசி போல் நெல் விளையும்
பட்டணம் போல் போரேறும்
சரஞ்சரமாய் நெல் விளையும்
சன்னிதி போல் போரேறும்
கொத்துக்கொத்தாய் நெல் விளையும்
கோபுரம்போல் போரேறும்

கட்டுக் கலங்காணும்
கதிர் உழக்கு நெல் காணும்
அடித்துபொலி தீர்த்த
அதுவும் கலங்காணும்
மூன்று கலங்காணுமின்னு சொக்கர்
முத்திரிக்கையடிச்சாரோ

அடுப்பு மொழுகி
ஐவிரலால் கோலமிட்டு
பானை கழுவி
பன்னீரால் உலை வைத்து
தங்க நெருப்பெடுத்து
தனி நெருப்பு உண்டு பண்ணி
பொன் போல் நெருப்பெடுத்து மீனாள்
பொறி பறக்க ஊதிவிட்டா

சம்பாக் கதிரடிச்சுச் சொக்கர்
தவிச்சு நிற்கும் வேளையிலே
வேரில்லாக் கொடிபிடுங்கி மீனாள்
தூரில்லாக் கூடைசெய்து
கூடையிலே சோறெடுத்து
குடலையில காயெடுத்து
சோலைக்கிளி போல மீனாள்
சோறுகொண்டு போனாளாம்

நேரமாச்சுதுன்னு சொக்கர்
நெல்லால் எறிந்தாராம்
கலத்திலிட்ட சோறுதன்னில்
கல்லோ கிடந்ததென்று சொக்கர்
கடுங்கோபம் கொண்டாராம்
வாரி எறிந்தாராம் சொக்கர்
வயிரமணிக் கையாலே

சோர்ந்து படுத்தாளாம் மீனாள்
சொக்கட்டங்காய் மெத்தையில
மயங்கி விழுந்தாளாம் மீனாள்
மல்லிகைப்பு மெத்தையில
வாரியெடுத்தாராம் சொக்கர்
வலதுபுறத் தோளணைய
ஏந்தி எடுத்தாராம் சொக்கர்
இடதுபுறத் தோளணைய

அழுத குரல்கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ள மட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையில உள்ள மட்டும்
மானா மதுரைவிட்டார்
மதுரையில பாதிவிட்டார்
தல்லாகுளமும்விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையில பாதிவிட்டார்

தங்கம் நறுக்கி
தமருவெட்டத் தூண் நிறுத்தி
வெள்ளி வளை பூட்டி
மேக வண்ணத் தொட்டி கட்டி
தொட்டி வரிஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
ஆட்டினார் சொக்கலிங்கம்
அயர்வு வரும்வரையில்
ஊட்டினார் பால் அமுதம்
உறக்கம் வரும்வரையில்
கட்டிலுக்குங்கீழே
காத்திருப்பாள் மீனாளும்
தொட்டிலுக்குங்கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்.

Thursday, April 9, 2009

சதுரகிரி மலையேறி...

22.

ராராரோ ராரிரேரோ...
ராரிரேரோ....

சதுரகிரி மலையேறி
சாதிலிங்க கட்டை வெட்டி

ஈழத்து கப்பலிலே
ஏற்றிவரும் தேக்குமரம்

ஏழு தச்சன் ஆசாரி
இழைபிழைக்கும் கம்மாளர்

சேர்த்து பணி படுத்தி
சித்திரத்தால் ஒப்பமிட்டு

முன்பக்க தொட்டிலுக்கு
முத்துச்சரம் வைத்திழைத்து

பின்பக்க தொட்டிலுக்கு
பச்சைக்கல் வைத்திழைத்து

வலதுபுற தொட்டிலுக்கு
வைரக்கல் வைத்திழைத்து

இடதுபுற தொட்டிலுக்கு
இரத்தினக்கல் வைத்திழைத்து

பஞ்சாட்சரமெழுதி ஒங்க
பாட்டனார் பேரெழுதி

சிரிக்கும் கிளியெழுதி ஒங்க
சின்னய்யா பேரெழுதி

அஞ்சு கிளி கொஞ்ச
ஆண்டம்மான் பேரெழுதி

கொஞ்சு கிளி அஞ்செழுதி
குட்டியம்மான் பேரெழுதி

தாரா எழுதி
தாய் மாமன் பேரெழுதி

அன்னம் எழுதி
அதன் மேல் புறாவெழுதி

கொண்டு வந்து கண்டானே ஆசாரி
கொம்பனையா வாசலிலே..

ராராரோ...

Friday, March 20, 2009

வள்ளி தாலாட்டு 2

குமரக்கிழவர்!

நல்ல கிழவனைப்போல் சுப்பையா
நடிச்சாராம் தினைப்புனத்தே
மெத்தப் பசிக்கிதுன்னு சுப்பையா
வித்தை பல செய்தாராம்

தேனும் தினைமாவும் வள்ளி
சேத்துக் கொடுத்தாளாம்
தாகமெடுக்குதுன்னு சுப்பையா
சாலங்கள் செய்தாராம்

தேன் குடிக்கத் தந்தாளாம்
தேன்மொழியா வள்ளியம்மை
அதையும் குடிக்காம சுப்பையா
அழைச்சாராம் சுனையருகே

கூட்டி நடந்தாளாம்
கொம்பனையா வள்ளியம்மை
தண்ணி குடிக்கையில தாத்தா
தடுமாறி விழுந்தது போல்

ஆட்டங்கள் ஆடி சுப்பையா
ஆரணங்கை கூவினாராம்
ஏதோ சிரமமென்று
எடுத்தணைத்தா வள்ளியம்மை

கன்னியவள் கை கொடுத்தாள் சுப்பையா
கட்டி அணைத்தாராம்
தோகையவள் கை கொடுத்தாள் சுப்பையா
தோளோடணைத்தாராம்

காட்டிலே வாழுகின்ற
கன்னி வள்ளிநாயகிக்கு
எதைக் கண்டா பயமென்றார்
ஏந்திழையா வள்ளியவள்

கரடி புலி சிங்கமென்றால்
கடுகளவும் பயமறியாள்
ஆனையென்று சொன்னாக்க
அதிகப் பயமுண்டு

கொடி படர்ந்த வள்ளியர்கு சுப்பையா
கொண்டு வந்தார் வெள்ளானை
காட்டானை காட்டி சுப்பையா
கலியாணம் செய்து கொண்டார்

கிள்ளு வளையலிட்டு சுப்பையா
கிளிமொழியை மாலையிட்டார்
அடுக்கு வளையலிட்டு சுப்பையா
ஆரணங்கை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டு
பசுங்கிளியை மாலையிட்டார்

அண்ணாவைத் தான் நினைந்து சுப்பையா
ஆரணங்கை மாலை கொண்டார்
கொண்டார் மனைவியாய்
கூட்டி வந்தார் தன்னருகே.

Wednesday, March 4, 2009

வள்ளி தாலாட்டு!

21.

வள்ளி பிறந்தது!

வள்ளியென்றால் வள்ளி
மலைமேல் படரும் வள்ளி
வள்ளிக்கொடியருகே மான்
கன்று போட்டதென்று!
கொடியில் கிடந்த பிள்ளை
கூவி அழும் போது
வனத்துக்குறவர்களாம்
மான் பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல் கேட்டு
குறவேடர் ஓடி வந்தார்
மதலை குரல் கேட்டு
மான் வேடர் ஓடிவந்து
வாரி எடுத்து வன்ன மடியில்
வைத்து
தூக்கி எடுத்து சொர்ண மடியில்
வைத்து
மண் துடைத்து மடியில்
வைத்து
வள்ளி என்று பேரும்
வைத்து
வளர்த்தார் வனந்தனிலே!

வனங்காத்தது

காடு வெட்டி தீக்கொளுத்தி
மேடு பள்ளம் செப்பனிட்டு

தின்னத் தினை விதைத்து வள்ளி
தேன்மொழியை காவல் வைத்தார்!
அறுக்கத் தினை விதைத்து வள்ளி
அருங்கிளியைக் காவல் வைத்தார்!

உழக்குத்தினை விதைத்து வள்ளி
உத்தமியை காவல் வைத்து
ஓடி கிளி விரட்டி!
நாழித்தினை விதைத்து வள்ளி
நாயகியை காவல் வைத்து
நடந்து கிளி விரட்டி!
குறுணித்தினை விதைத்து வள்ளி
கொம்பனையை காவல் வைத்து
கூவி கிளி விரட்டி!
பதக்குத்தினை விதைத்து வள்ளி
பைங்கிளியை காவல் வைத்து
பாடிக்கிளி விரட்டி!
ஆலோலம் என்று சொல்லி வள்ளி
அழகாய் கிளி விரட்டி!
அறுக்கப் பதமாச்சே வள்ளி
அருங்கிளியாள் காத்த தினை!
கொய்யப் பதமாச்சே வள்ளி
கொம்பனையாள் காத்த தினை!

தேடி வந்தார் முருகர்!

சுப்பையா உந்தனுக்கு
தோதான வள்ளியவள்!
சண்முகா உந்தனுக்கு
சரியான வள்ளியவள்!
வீணை கொண்ட நாரதரும்
வேலவர்க்கு சொல்லி விட்டார்!

வள்ளிமான் வந்ததென்று சுப்பையா
வந்தார் வனந்தனிலே!
புள்ளிமான் புகுந்ததென்று சுப்பையா
புகுந்தார் தினைப்புனத்தே!

தினைப்புனமும் காத்து வள்ளி
திகைத்து நிற்கும் வேளையில
வனத்திருக்கும் வேடரைப்போல் சுப்பையா
வந்தாராம் மாலையிட!
தேனும் தினைமாவும்
தெவிட்டாத வேலவரும்
பாலும் தினைமாவும்
பசியார வந்தாராம்!

வெள்ளிமலை தெற்கே
விறலிமலை தென்மேற்கே
கல்லுமலைக்குள்ளிருந்து
கதிவேலர் ஓடிவந்து
வள்ளிதனை மாலையிட
வந்தார் வனத்தினுள்ளே!

வேடமிட்டு வந்த வேலவர்!

வண்டாடப் பூ மலர வள்ளி
வனங்காக்கக் கண்டாரோ!

வள்ளி அழகுக்கும் வள்ளி
வலது கையி தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா
கண்டாசை கொண்டாராம்!
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா
உள்ளாசைப்பட்டாராம்!
கூந்தல் அழகுக்கு சுப்பையா
குறவேசம் ஆனாரோ!

ஓடினாள் வள்ளி
ஒளிந்தாள் வனந்தேடி!
தேடினார் வேல் முருகர் வள்ளி
திருவடியைக்காணாமல்!
வருந்தினார் முருகர் வள்ளி
வடிவழகைக் காணாமல்!

-தொடரும்!

Tuesday, March 3, 2009

அய்யா நீ அழுத கண்ணீர்

20

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

அய்யா(ஆத்தா)நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
வாழைக்கு பாய்கையிலேயே
வத்தியதாம் கண்ணீரும்!

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ