Thursday, September 9, 2010

காடு வெட்டி நாடாக்கி...

38

ராராரோ ராராரோ
ராரி ரேரோ ராராரோ

காடு வெட்டி நாடாக்கி
கழனியெல்லாம் கதிராக்கி

நாடுபெற்று வருவார்கள்
ராசாவோ உங்களய்யா

வெற்றி பெற்று வருவார்கள்
வீமரரோ உங்களய்யா

செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி

கம்ப மகள் சேனையர்க்கு- என் அய்யா நீ
கைக்குதவ வந்தவனோ

கொம்பனையா வாசலுக்கு என் அய்யா நீ
கொண்டுவிக்க வந்தவனோ

கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு

ராரா ரோ! ராரி ரரோ!
ராரி ரரோ! ராரா ரோ!

Tuesday, August 10, 2010

ராராட்டத் தூணசைய...

37

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிரேரோ ராராரோ

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய

அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ

வில்லு முருகசைய
விளங்கப்பிறந்தவனோ

சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க

எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தவனோ

பிள்ளைக்கலி தீர்க்க வந்த
பெருமானும் நீ தானோ

மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ

எங்கள்குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ

ராராரோ! ராரிரரோ!
ராரிரரோ! ராரோ!




Monday, July 26, 2010

ஏலம்பூ வாய் நோக..

36

ராரா.. ரோ ராரா.. ரோ 
ராரி.. ரேரோ...  ராரா ..ரோ.. 

ஏலம்பூ வாய் நோக  
ஏனழுதான் என்னரியான்

பாலுக்கழுதானோ
பவள வாய் பொன் சொரிய

தேனுக்கழுதானோ
செம்பவள வாய் நோக

கரும்புக்கழுதானோ
கற்கண்டு வாய்நோக

அரசோ நவமணியோ
உன் அங்கமெல்லாம் தங்க மயம்

கனிமொழிந்த வாயாலே
உன் கண்ணிலிட்ட மை கரைய

ஆளப்பிறந்தவனே அழுகிறதும்
உன் முறையோ

அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்

மசன்டையில அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு

பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியனார் பேரனுக்கு

பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு

தாங்கத் தடுக்கிருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்

ஏந்தத் தடுக்கிருக்கு உனக்கு
ஏந்திழையார் தாலாட்ட

கண்ணோ கமலப்பூ
உன் காதிரண்டும் தாமரப்பூ

மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ  கண்ணுறங்கு

ராரோ  ராரோ என் கண்ணே
ராரி ராரோ ராரோ

Thursday, July 15, 2010

அச்சடிக்கப்பொன் விளைய...

35

ராராரோ ராராரோ என்னய்யா
ராரிரேரோ ராராரோ

அச்சடிக்கப்பொன் விளைய
ஆதிச்சார் உன் தேசம்
வைத்திருக்கத் தந்தமகன்
நீ.. ஆளுவாய் நூறு குடி

பூப்பூத்த கோயிலிலே
பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான்
மாலைக்கழுதாயோ

ஆறாரும் அந்தணரும்
அப்போ வருங்கிளையும்
தாயாரும் சேனைகளும்
தழைக்கவென்று வந்தாயோ!

பெத்தாரும் சேனைகளும்
பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும்
மகிரவென்று வந்தாயோ!

செம்பொன் நல்ல தேரேறி
சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில்
வருவார் மருமகனோ (ராராரோ…)

Monday, July 12, 2010

தேனோ திரவியமோ...

34.

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

தேனோ திரவியமோ
தெவிட்டாத தெள்ளமுதோ

கட்டிக்கரும்போ
கற்கண்டோ சக்கரையோ

மாசி வடுவோ
வைகாசி மாம்பழமோ

கோடைப்பலாச்சுளையோ
குலை சேர்ந்த மாங்கனியோ

கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
குறையில்லா சித்திரமோ

சங்கரா உன் காவல்
சங்கடங்கள் நேராமல்

சாத்தையா உன் காவல்
காத்திடுவாய் எங்கள் குலம்

வேலவா உன் காவல்
வேறு வினை வாராமல்

சொக்கையா உன் காவல்
சொப்பனங்கள் தட்டாமல்

கருப்பையா உன் காவல்
கண்ணேறு வாராமல்

கண்ணேறு வாராமல்
கற்பூரம் சுத்திடுங்கள்

வெண்ணீறு இட்டிடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி சுத்த

சுண்ணாம்பும் மஞ்சளுமாய் திட்டி
சுத்திடுங்கள் சுந்தரர்க்கே

Sunday, June 13, 2010

தூங்காத கண்ணுக்கு

33.

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

கண்ணுக்கோ கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கோ மையெழுதி

தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி

உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி

அன்னம் எழுதி என் கண்ணே
அதன் மேல் புறாவெழுதி

தாரா எழுதி என் கண்ணே
தாய் மாமன் பேரெழுதி

கொஞ்சு கிளியெழுதி என்கண்ணே
குட்டி அம்மான் பேரெழுதி

அஞ்சு கிளி எழுதி என்கண்ணே
அய்யாக்கள் பேரெழுதி

பச்சைக் கிளி எழுதி என் கண்ணே
பாட்டன்மார் பேரெழுதி

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ…

Wednesday, May 19, 2010

நாழிச்சிறு சலங்கை

32

நாழி சிறு சலங்கை
நல்லபவுன் பொன்சலங்கை

ஒழக்கு சிறு சலங்கை
ஒசந்த பவுன் பொன்சலங்கை

பதக்கு சிறு சலங்கை
பழைய பவுன் பொன்சலங்கை

வெள்ளி சிறு சலங்கை
வெலை மதியா வீரதண்டே

சொல்லிச் சமையுதங்கே
சோழரோட வீரதண்டே

பண்ணிச் சமையுதங்கே
பாண்டியனார் வீரதண்டே

ஆருக்கிடுவோமுன்னு
தேடித்திரிகையிலே

எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தா(ளோ)னோ

தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானோடி வந்தா(ளோ)னோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

Tuesday, April 20, 2010

சங்கு முழங்க...

31

சங்கு முழங்க என் கண்ணே
சமுத்திரத்தில் மீன் முழங்க

எங்கே முழங்குதுன்னு சாமி
ஏணி வச்சு பார்த்தாராம்

அடிக்கரும்பை வெட்டி
நடுக்கடலில் வில்லூணி

கருங்கடலில் வில்லூணி
கணபதியை கை தொழுது

செங்கடலில் வில்லூணி
சிவனாரை கை தொழுது

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

வள்ளியம்மை தெய்வானை
மாறாத சண்டையினால்

தெய்வானை ஓடி வந்து
சீவிலியை சாட்சி வச்சா

வள்ளியம்மை ஓடி வந்து
மயில்தனையோ சாட்சி வச்சா

ஏங்கானூம் வேலவரே
இந்த மதி உந்தனுக்கு

தேம்பி அழுதாளாம்
தேன்மொழியால் தெய்வானை

போங்கானும் வேலவரே
பொன்மலைக்கு அப்பாலே

பொங்கி அழுதாளாம்
பூங்கொடியாள் வள்ளியம்மை

கல்லுமலைக்குள்ளிருந்து
கதிர்வேலர் ஓடி வந்தார்

கடுகளவும் பயம் வேண்டாம்
காத்திடுவேன் உங்களையே!

கண்ணான கண்ணே என்
கண்மணியே கண்ணுறங்கு

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

Wednesday, April 14, 2010

நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளைக்கு

30

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ
எங்கிருந்தான் எங்கிருந்தான்
இது நெடுநாள் எங்கிருந்தான்

மாசி மறஞ்சிருந்தான்
மழமேகம் சூழ்ந்திருந்தான்
திங்கள் மறஞ்சிருந்தான்
தேவாக்கள் கூடருந்தான்

சிவனோடருகிருந்தான்
தேடியதால் இங்கு வந்தான்
மகாதேவர் கூடருந்தான்
மனவருத்தங்கண்டு வந்தான்

எங்கள் குடி மங்காகும்
எதித்த குடி ஏசாகும்
தங்கமணி பொற்கதவை
தாழ்திறக்க வந்தானோ

தாளால் கடுதாசி
தங்கத்தால் மைக்கூட்டு
பேனா புடிச்செழுத தம்பி
பொறந்து வந்த புனக்கிளியோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ