Wednesday, March 4, 2009

வள்ளி தாலாட்டு!

21.

வள்ளி பிறந்தது!

வள்ளியென்றால் வள்ளி
மலைமேல் படரும் வள்ளி
வள்ளிக்கொடியருகே மான்
கன்று போட்டதென்று!
கொடியில் கிடந்த பிள்ளை
கூவி அழும் போது
வனத்துக்குறவர்களாம்
மான் பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல் கேட்டு
குறவேடர் ஓடி வந்தார்
மதலை குரல் கேட்டு
மான் வேடர் ஓடிவந்து
வாரி எடுத்து வன்ன மடியில்
வைத்து
தூக்கி எடுத்து சொர்ண மடியில்
வைத்து
மண் துடைத்து மடியில்
வைத்து
வள்ளி என்று பேரும்
வைத்து
வளர்த்தார் வனந்தனிலே!

வனங்காத்தது

காடு வெட்டி தீக்கொளுத்தி
மேடு பள்ளம் செப்பனிட்டு

தின்னத் தினை விதைத்து வள்ளி
தேன்மொழியை காவல் வைத்தார்!
அறுக்கத் தினை விதைத்து வள்ளி
அருங்கிளியைக் காவல் வைத்தார்!

உழக்குத்தினை விதைத்து வள்ளி
உத்தமியை காவல் வைத்து
ஓடி கிளி விரட்டி!
நாழித்தினை விதைத்து வள்ளி
நாயகியை காவல் வைத்து
நடந்து கிளி விரட்டி!
குறுணித்தினை விதைத்து வள்ளி
கொம்பனையை காவல் வைத்து
கூவி கிளி விரட்டி!
பதக்குத்தினை விதைத்து வள்ளி
பைங்கிளியை காவல் வைத்து
பாடிக்கிளி விரட்டி!
ஆலோலம் என்று சொல்லி வள்ளி
அழகாய் கிளி விரட்டி!
அறுக்கப் பதமாச்சே வள்ளி
அருங்கிளியாள் காத்த தினை!
கொய்யப் பதமாச்சே வள்ளி
கொம்பனையாள் காத்த தினை!

தேடி வந்தார் முருகர்!

சுப்பையா உந்தனுக்கு
தோதான வள்ளியவள்!
சண்முகா உந்தனுக்கு
சரியான வள்ளியவள்!
வீணை கொண்ட நாரதரும்
வேலவர்க்கு சொல்லி விட்டார்!

வள்ளிமான் வந்ததென்று சுப்பையா
வந்தார் வனந்தனிலே!
புள்ளிமான் புகுந்ததென்று சுப்பையா
புகுந்தார் தினைப்புனத்தே!

தினைப்புனமும் காத்து வள்ளி
திகைத்து நிற்கும் வேளையில
வனத்திருக்கும் வேடரைப்போல் சுப்பையா
வந்தாராம் மாலையிட!
தேனும் தினைமாவும்
தெவிட்டாத வேலவரும்
பாலும் தினைமாவும்
பசியார வந்தாராம்!

வெள்ளிமலை தெற்கே
விறலிமலை தென்மேற்கே
கல்லுமலைக்குள்ளிருந்து
கதிவேலர் ஓடிவந்து
வள்ளிதனை மாலையிட
வந்தார் வனத்தினுள்ளே!

வேடமிட்டு வந்த வேலவர்!

வண்டாடப் பூ மலர வள்ளி
வனங்காக்கக் கண்டாரோ!

வள்ளி அழகுக்கும் வள்ளி
வலது கையி தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா
கண்டாசை கொண்டாராம்!
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா
உள்ளாசைப்பட்டாராம்!
கூந்தல் அழகுக்கு சுப்பையா
குறவேசம் ஆனாரோ!

ஓடினாள் வள்ளி
ஒளிந்தாள் வனந்தேடி!
தேடினார் வேல் முருகர் வள்ளி
திருவடியைக்காணாமல்!
வருந்தினார் முருகர் வள்ளி
வடிவழகைக் காணாமல்!

-தொடரும்!

3 comments:

இது என் சங்கப்பலகை said...

முருகா..முருகா..என் அப்பன் ஞானபண்டிதன் வாழ்கையே இங்கு தெம்மாங்கு பாட்டாச்சு.!
வாசிக்க வாசிக்க புண்ணான மனசெல்லாம்.செந்தாழம் பூத்தாச்சு..!
ஆரிவரோ செந்தமிழில் தேனாக பாட்டெழுதி தூங்கவச்சார் ஆராரோ..!

வெங்கட்.தாயுமானவன்.

மீனாமுத்து said...

நீங்க சொல்வதுபோல் இந்த வள்ளி தாலாட்டை கேட்டு குழந்தை தூங்குவதோடு,இதைப்பாடும்போது ஏற்படும் உணர்வுகள் ஆனந்தமாக இருக்கும்!

ஆமாம் யாரோ!இப்படியொரு தாலாட்டை பாடிவைத்தவர் யாரவரோ!

’ஊட்டம்’என்ற அந்த சொல்லுக்கு மிக பொருத்தம் தங்களின் பின்னூட்டம்!

மேலும் மேலும் ஆர்வத்துடன் தாலாட்டுக்களை எழுத வைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

Unknown said...

பகிர்ந்தமைக்கு நன்றி!